எல்லா நடிகைகளுடனும் நடிக்க ஆசை திருப்பூரில் நடிகர் சதீஷ் பேட்டி
சமந்தா, கீர்த்தி சுரேஷ் என எல்லா நடிகைகளுடனும் நடிக்க எனக்கு ஆசை தான். இதற்கு அவர்கள் தான் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று திருப்பூரில் நடிகர் சதீஷ் கூறினார். நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்த வெளியான காங்சரிங் கண்ணப்பன் திரைப்படம் 25 நாட்களாக திரையரங்கில் ஓடி வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் 25வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சதீஷ் கலந்துகொண்டு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து 25வது நாளை கொண்டாடும் வகையில் கேக் ஒன்றை ரசிகர்களுடன் சேர்ந்து வெட்டி அதனை குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். தொடர்ந்து மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனத்தலைவருமான விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறும்படம் ஒன்றை திரையிடப்பட்டு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடுகிறது என்றால் அது 100 நாட்களுக்கு சமம் எனவும் அந்த வகையில் காங்சரிங் கண்ணப்பன் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருப்பதாகவும் தெரிவித்த அவர் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் மரியாதை செய்வது என்பது அது நடிகர் சங்கத்திற்கு பெருமை எனவும், நடிகர் சங்கத்தின் ஒரு அடையாளமே விஜயகாந்த் எனவும் பேட்டியளித்தார். எந்த நடிகைகளுடன் நடிக்க விருப்பம் என்ற கேள்விக்கு அது நடிகைகளின் விருப்பம் தான் எனவும் தானாக எந்த முடிவும் எடுப்பதில்லை கதைக்கேற்ற கதாபாத்திரங்களுக்காகவே நடிப்பதாகவும் தெரிவித்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் கடந்த டிசம்பர் மாதத்தில் பெரும்பாலான திரையரங்குகளை பொருளாதாரத்தில் காப்பாற்றியது நடிகர் சதீஷ் நடித்து வெளியான காங்சரிங் கண்ணப்பன் திரைப்படம் தான் எனவும், இது போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எனவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment